திருத்தந்தையின் புனித பூமிக்கானத் திருப்பயணம் அமைதிக்கான பாலம் என்று நோக்கப்படுகிறது
ஏப்.25,2009. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வருகிற மே மாதம் புனித பூமிக்குத் திருப்பயணம்
மேற்கொள்ளவிருப்பதையொட்டி அமைதிக்கான பாலம் என்ற தலைப்பில் இஸ்ரேல் சுற்றுலா அமைச்சகம்
இணையதளத்தில் விளம்பரத்தை கொடுத்து வருகிறது என்று செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
வருகிற
மே 11 முதல் 15 வரை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளில் திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பதையொட்டி
“புனித பூமி திருப்பயணம்: ஓர் அமைதிக்கான பாலம்” என்ற அதிகாரப்பூர்வ சுலோகத்தை அச்சுற்றுலா
அமைச்சகம் இணையதளத்தில் பயன்படுத்தி வருகிறது.
இந்த இணையதளப் பக்கம் ஏழு மொழிகளில்
உள்ளது. எனினும் மே 8 முதல் 11 வரை இடம் பெறும் திருத்தந்தையின் ஜோர்டன் திருப்பயணம்
பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
மேலும், திருத்தந்தையின்
புனித பூமிக்கானத் திருப்பயணத்தை கண்முன் கொண்டு, இஸ்ரேல்-திருப்பீட பணிக்குழு, புனித
பூமியில் திருச்சபை சொத்துக்கள் மற்றும் நிதி அமைப்பு குறித்த பொருளாதார உடன்பாடு குறித்த
பேச்சுவார்த்தைகளைத் துரிதப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.