ஏப்ரல்10,2009. உலகிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிறிஸ்துவின் குருக்கள் ஒவ்வொருக்கும்
திறந்த மனதாய் இருக்க வேண்டும் என்று திருஎண்ணெய் மந்திரிக்கும் திருப்பலி மறையுரையில்
கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கிறிஸ்து நமக்குத் தம்மை உண்மையில் அர்ப்பணிப்பதற்காகத்
தம்மையே தியாகம் செய்தார். குருத்துவப் புதுப்பித்தலானது, இறைவார்த்தையின் அன்பிலும்,
திருச்சபையோடு செபிப்பதிலும், தன்னைத் துறப்பதிலும், கிறிஸ்துவின் அன்பின் மகிழ்ச்சியைக்
கண்டு கொள்வதிலும் அடங்கியுள்ளது என்றும் திருத்தந்தை கூறினார்.
வத்திக்கான் தூய
பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இன்று காலை திருத்தந்தை நிகழ்த்திய திருப்பலியில், நுற்றுக்கணக்கான
குருக்களும் பொதுநிலையினரும் கலந்து கொண்டனர்.
58 ஆண்டுகளுக்கு முன்னர் தனது
குருத்துவ திருநிலைப்பாட்டுத் திருவிழிப்பின் போது, தனது வருங்கால குருத்துவ வாழ்விற்கு
ஆண்டவர் கொடுக்கும் வசனம் என்னவென்று அறிய விவிலியத்தை எடுத்து வாசித்த போது, உண்மையில்
அவர்களைப் புனிதப்டுத்தும், உமது வார்த்தையே உண்மை என்ற திருவசனமே வந்தது என்ற திருத்தந்தை
16ம் பெனடிக்ட், நம் ஆண்டவர் என்னைப் பற்றிப் பேசுகிறார், என்னிடம் பேசுகிறார் என்று
உணர்ந்து கொண்டேன். குருத்துவ திருநிலைப்பாடு என்பது கிறிஸ்துவில் மூழ்கியிருப்பதாகும்,
உண்மையில் மூழ்கியிருப்பதாகும். அன்பு நண்பர்களே, குருத்துவ வாக்குறுதிகளைப் புதுப்பிக்கும்
இந்நேரத்தில் உண்மையின் மனிதர்களாக, அன்பின், மனிதர்களாக, கடவுளின் மனிதர்களாக மாற்றுமாறு
நாம் செபிக்க விரும்புகிறோம். அவர் நம்மை அவரில் புதுப்பிப்பாராக. அதன்மூலம் புதிய உடன்படிக்கையின்
உண்மையான குருக்களாக மாறுவோம் என்றார்.