இன்றைய வழிபாடு குருத்து ஞாயிறு விழா என அழைக்கப்படுகிறது . காரணம்
கிறிஸ்து அரசருக்கு உரிய பாணியில் எருசலேமுக்கு பவனியாக மக்கள் அழைத்துச் செல்கின்றனர்
.
இயேசு எருசலேம் சென்று உலக மீட்புக்காக தம்மையே பலியாக அர்ப்பணிப்பதையே
வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார் .ஏனெனில் அங்குத்தான் அவரது இறுதிப்பயணம் நிறைவேறப்
போகிறது . அங்குத்தான் மனுமகனைப் பற்றி இறைவாக்கினர் முன் குறித்து இறைவாக்கினர் எழுதியதெல்லாம்
நிறைவேறும் . அங்குதான் கடவுளின் அரசும் வெளிப்படும் . எனவே இயேசு வைத்தகண் வாங்காது
எருசலேமுக்குச் செல்ல முனைந்து நிற்கிறார் . எருசலேமே இறைவாக்கினரைக் கொன்று உன்னிடம்
அனுப்பப்பட்டோரையும் கல்லால் எறியவும் எருசலேமே என்று இயேசு வருத்தப்பட்டு முன்னர் கூறியிருந்தாலும்
தாம் எருசலேம் செல்வதில் குறிக்கோளாயிருக்கிறார் . கிறிஸ்தவ வாழ்வு ஒரு பயணம் தானே .
அதுவும் விண்ணரசு எருசலேம் நோக்கிய பயணம் தானே . எனினும் வழியில் இடையூறுகள் கண்டு இன்னல்கள்
கண்டு தடம்மாறி விடுகிறோமே . கடந்ததை மறந்துவிட்டு முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு பரிசுபெற
வேண்டி இலக்கை நோக்கி முனைந்து நோக்கி ஓடுகிறேன் என்ற பவுலடியாருடைய மாதிரிகையை நாமும்
பின்பற்றுவோமா .
அடுத்து நாம் மக்கள் இயேசுவுக்குக் கொடுக்கும் புகழ்ச்சியைப்
பார்க்கிறோம் . அங்கு ஒருவருக்குச் சொந்தமான கழுதைக் குட்டி ஆண்டவருக்குத் தேவை என்றதும்
உரிமையாளர் தம் கழுதையை இயேசுவின் பணிக்கு அனுப்புகின்றார் . கழுதைலமேல் பவனி வரும் இயேசுவிலே
ஆண்டவரை , தம் அரசரைக் கண்டு மக்கள் வாழ்த்தி ஏத்துகின்றனர் . ஆண்டவர் பணிக்கு நம்மை
, நம் உடைமைகளை முன்வந்து கொடுக்கின்றோமா . ஆண்டவரின் அற்புதச் செயல்கள் அன்றாடம் நம்
வாழ்விலே நடந்தேறுவது கண்டு அவரை வாயாறப்புகழ்கிறோமா . ஒரு நாமம் ஓருருவம் ஒன்றும் இல்லாற்கு
ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொடடோமோ எனத் தமிழ்ப் பாடல் வரிகள் கூறுகின்றன .
இயேசு
எருசலேமுக்குள் சென்றபோது மக்கள் குருத்தோலைகளை பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய்
ஓசான்னா ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக .இஸ்ராயேலின் அரசர் போற்றப்பெறுக என்று
சொல்லி ஆர்ப்பரித்தனர் . திருத்தூதர் யோவான் இந்நிகழ்ச்சியை வித்தியாசமாக விவரிக்கிறார்
. அந்நேரத்தில் இயேசுவின் சீடர்கள் இச்செயல்களின் பொருளைப் புரிந்துகொள்ளவில்லை . அவரைப்பற்றி
மறைநூலில் எழுதப்பட்டிருந்தவாறே இவையனைத்தும் நிகழ்ந்தன என்பது இயேசு மாட்சி பெற்ற பிறகே
அவர்கள் நினைவுக்கு வந்தது .
நாம் கழுதையை கேலி செய்தாலும் விவிலியக்
காலத்தில் கழுதையை மதிப்போடு நடத்தி வந்தார்கள் . கழுதை அமைதியின் விலங்காகக் கருதப்பட்டது
. குதிரையோ போர்க்களத்திற்கு வீரர்களைக் கொண்டு செல்லும் விலங்காகக் கருத்தப்பட்டது
. இறைவாக்கினர் சக்கரியா மீட்பர் எருசலேமுக்குக் கழுதைமேல் ஏறி வருவார் எனக் கூறுகிறார்
. தற்பொழுது இயேசு சக்கரியாவின் இறைவாக்கை நிறைவேற்றுகிறார் .
இதனால் இயேசு தாம்
மீட்பர் என்பதைக் காட்டுகிறார் . அடுத்து அவருடைய மீட்புப்பணி என்ன என்பதைக் காட்டுகிறார்
. இயேசு வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு மீட்பரின் பணி என்ன என்ற சரியான கருத்துத் தெளிவில்லாது
இருந்தது . அவர்கள் மீட்பரை ஒரு பெரிய அரசராக எண்ணினர் . உரோமைய சாம்ராஜ்யத்தை வீழ்த்த
வந்தவர் என எதிர்பார்த்தனர் . எருசலேத்தில் இயேசு அமைதியின் சின்னமாகிய கழுதையின்மேல்
ஏறிச் செல்வது மீட்பர் போரை விரும்புவரல்லர் என்பதைக் காட்டுகிறது .
இயேசு அரியணையில்
அமர்ந்து கொண்டு வெல்லப்பட்ட நாடுகளின் மக்களால் சேவை செய்யப்படுவதை விரும்பியவரல்லர்
. அவர் முழந்தாளில் அமர்ந்து தம் சீடர்களின் பாதங்களைக் கழுவ வந்திருக்கிறார் . இயேசு
போர்முரசு கொட்ட வரவில்லை . வறுமை , தாகம் , வெறுப்பு , எல்லா வகையான அநீதி ஆகியவற்றுக்கு
எதிராக போர்தொடுக்க வந்துள்ளார் . இயேசு மக்களுக்குத் தீர்ப்பிட வரவில்லை . மக்களுக்கு
மன்னிப்பு வழங்கவே வந்துள்ளார் . இயேசு மக்களின் கனவுகளை அழிக்கவல்ல அவற்றை அற்புதமான
முறையில் நிறைவேற்றவே வந்தார் . இயேசு மக்களைக் கட்டாயப்படுத்தித் தம்மைப் பின்பற்றுமாறு
ஆணை பிறப்பிக்கவில்லை . அவர்கள் மக்களை பாசத்தோடு தம்மிடம் வருமாறு அழைப்பு விடுக்கிறார்
.
இந்த இயேசுவையே நாம் இன்று வரவேற்று வாழ்த்துக் கூறுகிறோம் . இவர்
இந்தப் புனித வாரத்தில் நம் உள்ளங்களில் சிறப்பான முறையில் எழுந்தருளிவர விரும்புகிறார்
. இவரே எப்போதும் நம்மிடையே இருந்து வழிகாட்டுபவர் . எனவே நாமும் மகிழ்ச்சியோடு ஓசான்னா
பாட்டுப்பாடி ஆண்டவர் பெயரால் வருபவர் வாழ்க , அமைதியின் மன்னவா வருக என வாழ்த்துவோம்
.
இதே நாளில் திடீரென நிலைமை மாறுகிறது . யூதர்களின் அரசராக வந்த இயேசு
குற்றவாளியாகக் கருதப்படுகிறார் . வாழ்த்துப்பாக்கள் ஓய்ந்து சாட்டையடியும் , காரி உமிழ்தலும்
அவருக்கு வழங்கப்படுகின்றன . அவரைக் கொல்லும் கொல்லும் என்ற சத்தம் கேட்கிறது . அவரது
கழுதை மறைந்து விடுகிறது . இயேசுவே சிலுவையைச் சுமந்து சிலுவைச் சாவுக்குச் செல்கிறார்
. கூட்டம் கலைந்து செல்கிறது .
இது வாழ்வின் நிலையாமையை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது
. நிலைமாறும் உலகம் . இயேசு ஒரே நாள்தான் அரசராக பவனி வந்தார் . கல்வாரி்ச் சாவுக்கு
நாம் இப்பொழுது அவரைப் பின் தொடர்கிறோம் . இயேசுவின் நண்பர்களாக வந்த கூட்டம் சிலுவையில்
அறையும் எனக்கூறுவது இயேசுவுக்கு வேதனையைத் தந்தது .
நேற்றும் இன்றும் எந்நாளும்
மாறாத கடவுளாகிய இயேசு மனிதர்களால் இரண்டு நாளில் வெவ்வேறு விதமாக நடத்தப்படுகிறார் .
இப்படிப்பட்ட நாடகப் பாணியினாலான நிலைமை மிக முக்கியமான புனித வாரத்துக்கு நம்மை அழைத்துச்
செல்கிறது . இயேசுவின் மீது பற்றுக்கொண்ட அனைவரும் இப்புனித வாரத்தில் இயேசுவின் பாடுகளில்
பங்கு கொண்டு அவரைப் பின் தொடர்வோம் . பாடுகள் என்னும் சொல் இயேசு பட்ட மரண வேதனையைப்
பிரதிபலித்துக் காட்டுகிறது . இயேசுவின் பாடுகளுக்கு முன்னால் நம்முடைய துயரங்கள் தூசியாக
மறைந்து விடுகின்றன .