2009-04-02 13:54:28

ஏப்ரல் 03 - தவக்காலச் சிந்தனை யோவா.10, 31-42


அக்காலத்தில் இயேசுவின் மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர். இயேசு அவர்களைப் பார்த்து ' தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்? ' என்று கேட்டார். யூதர்கள் மறுமொழியாக ' நற்செயல்களுக்காக அல்ல இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய் ' என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து ' ″ நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன் ″ என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா? கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது. அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை ″ இறை மகன் ″ என்று சொல்லிக் கொண்டதற்காக ' இறைவனைப் பழித்துரைக்கிறாய் ' என நீங்கள் எப்படிச் சொல்லலாம்? நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்ப வேண்டாம்.38 ஆனால் நான் அவற்றைச் செய்தால் என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள் ' என்றார். இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.40 யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார். பலர் அவரிடம் வந்தனர். அவர்கள் ' யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை; ஆனால் அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று ' எனப் பேசிக்கொண்டனர். அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

இறைச்சக்தியின் வல்லமை அதை நம்புவோரிடம் இருக்கும் என்பார்கள். ஒருமுறை முத்தி பெற்ற அன்னை தெரேசாவிடம், இத்தனை அரிய காரியங்களைச் செய்வதற்குச் சக்தி உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கின்றது என்று கேட்ட போது, அவர் திருநற்கருணையைச் சுட்டிக்காட்டினாராம். எனக்கு உறுதியூட்டும் இயேசு கிறிஸ்துவால் எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு எனப் புனித பவுல் சொல்வார். என்னோடு இறைவன் இருக்கையில் யார் எனக்கு என்ன செய்ய முடியும்?








All the contents on this site are copyrighted ©.