மார்ச் 27- தவக்காலச் சிந்தனை யோவா. 7: 1-2, 10, 25-30
இதோ! இங்கே இவர் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாரே! யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே!
ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்துகொண்டார்களோ? ஆனால் மெசியா எங்கிருந்து
வருவார் என்பது யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்! இவர் எங்கிருந்து வருகிறார் என்பது
நமக்குத் தெரியுமே' என்று பேசிக் கொண்டனர். ஆகவே கோவிலில் கற்பித்துக் கொண்டிருந்தபோது
இயேசு உரத்த குரலில் நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும்.
ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது.
எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே என்றார்.
இயேசு பரிசேயர்களையும், சதுசேயர்களையும் பார்த்து, விரியன் பாம்புக் குட்டிகளே
என்றும் மன்னன் ஏரோதைப் பார்த்து குள்ளநரி என்றும் வெளிப்படையாகப் பேசினார். இந்த வெளிப்படையாகப்
பேசும் நிலை நம்மிடையே உள்ளதா? வள்ளலார் இறைவனிடம், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்
உறவு கலவாமை வேண்டும் என்று வேண்டினார். நம்மில் பலர் பல நேரங்களில் அடுத்தவர்களைப் பற்றித்
தரக்குறைவாகப் பேசுகிறோம். ஆனால் இது பேசுபவரின் தரத்தையும் குறைக்கத்தானே செய்யும்.
வாய்ச் சொற்களைக் குறையுங்கள், வாய்மையைக் குறைக்காதீர்கள் என்ற பெரியோரின் அறிவுரையை
இத்தவக்காலத்தில் சிந்திப்போமா?.