சமய சுதந்திரத்தைப் பாதுகாத்து அதனை நடைமுறைப்படுத்துவது வெறுப்பான பேச்சுக்களைத் தவிர்க்க
உதவும், திருப்பீட உயர் அதிகாரி
மார்ச்18,2009. சமய சுதந்திரத்தைப் பாதுகாத்து அதனை நடைமுறைப்படுத்துவது வெறுப்பான பேச்சுக்களைத்
தவிர்க்க உதவும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மனிதரின் சமய
உணர்வுகளை மதிக்கும் எண்ணத்தில் பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையை வரையறை செய்வது குறித்து
எழுந்துள்ள கேள்வி சரியானதே என்றாலும், சமய சுதந்திரம் குறித்த உலகளாவிய கொள்கை நன்றாகச்
செயல்படுத்தப்பட வேண்டுமெனத் திருப்பீடம் விரும்புகிறது என்று ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலகங்களுக்கான
திருப்பீட பிரதிநிதி பேராயர் சில்வானோ தொமாசி கூறினார்.
ஐ.நா.மனித உரிமைகள் அவையின்
பத்தாவது அமர்வில் பேசிய பேராயர் தொமாசி, சமய சுதந்திரத்திற்கான உரிமை, பேச்சு சுதந்திரத்திற்கான
உரிமையோடு உள்ளார்ந்த தொடர்பு கொண்டுள்ளது என்றார்.
ஒரே மதத்தவர்க்கிடையேயும்,
பல்வேறு மதத்தவர்க்கிடையேயும், சமய நம்பிக்கை இல்லாதவர்க்கிடையேயும் திறந்த மனதுடன்கூடிய,
அதேசமயம் மதிப்புடன்கூடிய விவாதங்களை ஊக்குவிப்பது குறித்து ஒவ்வொரு நாடும் தனது தேசிய
சட்டத்தில் வரையறை செய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.