வனப்பாதுகாப்பு நிர்வாகத்தில் தேசிய அளவில் முதலீடுகள் செய்யப்படுவதன் மூலம் பசுமை சம்பந்தப்பட்ட
ஒரு கோடி புதிய வேலைகளை உருவாக்க முடியும், ஐ.நா.
மார்ச்11, 2009. வனப்பாதுகாப்பு நிர்வாகத்தில் தேசிய அளவில் முதலீடுகள் செய்யப்படுவதன்
மூலம் பசுமை சம்பந்தப்பட்ட ஒரு கோடி புதிய வேலைகளை உருவாக்க முடியும் என்று எப்.ஏ.ஒ.
என்ற ஐ.நா.வின உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் அறிவித்தது.
தற்போதைய பொருளாதார
வீழ்ச்சியால் அதிக வேலைகள் இழக்கப்பட்டுள்ள நிலையில் வனப்பாதுகாப்பு நிர்வாகம், இலட்சக்கணக்கான
பசுமைப் புரட்சி வேலைகளை உருவாக்குவதற்கான கருவியாக மாற முடியும், இதனால் ஏழ்மையைக் குறைக்கவும்
சுற்றுச் சூழலை மேம்படுத்தவும் இயலும் என்று அந்நிறுவனத்தின் வனத்துறையின் உதவி பொது
இயக்குனர் யான் ஹெய்னோ கூறினார்.
கார்பனுக்கு காடுகளும் மரங்களும் முக்கிய சேமிப்புக்கிடங்கு
என்பதால் பசுமைப் புரட்சியில் முதலீடு செய்யப்படுவதன் மூலம் வெப்பநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கு
மிகவும் உதவ முடியும் என்றும் ஹெய்னோ தெரிவித்தார்.
இந்தியாவின் கிராம வேலைவாய்ப்புத்
திட்டத்தில் வனப்பாதுகாப்பு முக்கிய இடம் பெற்றிருப்பதாகவும் ஐ.நா.வின உணவு மற்றும் வேளாண்மை
நிறுவனம் அறிவித்தது.
உரோமையில் இம்மாதம் 16 முதல் 20 வரை உலக வன வாரம் கடைப்பிடிக்கப்படும்
போது காடுகளைப் பாதுகாப்பது முக்கிய விடயமாக விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.