ஆப்ரிக்காவில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான திட்டத்திற்கு ஜப்பான் 80 இலட்சம் டாலர்
உதவி
மார்ச்11, 2009. ஆப்ரிக்காவின் காங்கோ ஜனநாயக குடியரசு, சாட் ஆகிய நாடுகளில் நிலக்கண்ணி
வெடிகளால் பலர் கொல்லப்பட்டும் முடமாகியும் வருகின்ற வேளை, நிலத்தில் இன்னும் வெடிக்காமல்
புதையுண்டு கிடக்கும் அவ்வெடிகளை அகற்றுவதற்கான திட்டத்தை ஊக்குவிப்பதற்கென ஏறத்தாழ 80
இலட்சம் டாலரை வழங்க உறுதியளித்துள்ளது ஜப்பான்.
இதனை அறிவித்த யுஎன்மாஸ் என்ற
ஐ.நா.வின் நிலக்கண்ணி வெடி தடுப்பு அமைப்பு, ஜப்பானின் இவ்வுதவியின் மூலம் நூறாயிரக்கணக்கான
மக்கள் பலனடைவார்கள் என்று கூறியது.
போரின் பின்விளைவுகளால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள
பத்து நாடுகளில் சாட் நாடும் ஒன்றாகும். மேலும், காங்கோ ஜனநாயக குடியரசில் நிலக்கண்ணி
வெடிகளின் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் விவசாயம், தண்ணீர் வளம், குடியிருப்பு, பள்ளிகள்
மற்றும் பிற பகுதிகளுக்கு ஜப்பானின் இந்நிதி உதவி மிகவும் பயன்படும் என்று ஐ.நா. கூறியது.