பாப்பிறை அமைப்பு பாலைவனமாவதைத் தடுப்பதற்கு நிதியுதவி
14பிப்.2009. ஒன்பது ஆப்ரிக்க நாடுகளில் நிலங்கள் பாலைவனமாவதைத் தடுப்பதற்கும் கிராமப்புற
முன்னேற்றத்திற்குமென கடந்த ஆண்டில் இருபது இலட்சம் டாலருக்கு அதிகமான நிதியுதவி செய்துள்ளது
பாப்பிறை அமைப்பு ஒன்று.
நிலங்கள் பாலைவனமாவது மற்றும் பஞ்சத்தைத் தடுப்பதற்கானத்
திட்டங்களுக்கு நிதியுதவி செய்யும் ஆப்ரிக்காவின் சாஹெல் பகுதிக்கான திருத்தந்தை 2ம்
ஜான் பவுல் அமைப்பானது, கடந்த ஆண்டில் 208 திட்டங்களுக்கு உதவியிருப்பதாக, கோர் ஊனும்
என்ற திருப்பீட பிறரன்பு அவை அறிவித்தது.
நைஜரில் ஏறத்தாழ இருபதாயிரம் மரங்கள்
நடவும், காம்பியாவில் வானொலிவழியான கல்வி நிகழ்ச்சிகளுக்கும், சாட் நாட்டில் இளையோரின்
தொழிற்பயிற்சி கல்விக்கும், மௌரித்தாநியா, கினிபிசாவோ நாடுகளில் தாய்சேய்நலத்திற்கும்,
மாலியில் ஆசிரியர் பயிற்சிக்கும் எழுத்தறிவின்மையைப் போக்குவதற்குமெனப் பல திட்டங்களுக்கு
திருப்பீட கோர் ஊனும் அவை உதவி செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.