தேவையில் இருப்போருக்கு உதவி செய்வதற்கு முன்வரும் நல்ல சமாரித்தான்கள் இல்லாமல் மனிதாபிமான
உதவிகளைச் செய்ய முடியாது, ஷீரன்
03,பிப்.2009. தேவையில் இருப்போருக்கு உதவி செய்வதற்கு முன்வரும் நல்ல சமாரித்தான்கள்
இல்லாமல் மனிதாபிமான உதவிகளைச் செய்ய முடியாது என்று ஐ.நா.வின் உலக உணவு திட்ட அமைப்பின்
இயக்குனர் ஜோசெட் ஷீரன் கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்டின் தவக்கால செய்தியை
நிருபர் கூட்டத்தில் வெளியிட்ட குழுவில் ஒருவரான இவர், இதில் கலந்து கொள்ள தனக்கு வாய்ப்பு
அளித்த திருத்தந்தைக்கும், கர்தினால் கோர்தெசுக்கும் நன்றி தெரிவித்தார்.
உலக
உணவு திட்ட அமைப்பு ஏறத்தாழ நாற்பது நாடுகளில் கத்தோலிக்க மறைமாவட்ட காரித்தாஸ் அமைப்புக்களோடு
சேர்ந்து வேலை செய்வதையும் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய பொருளாதார நெருக்கடிகளால்
மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளை மறக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட ஷீரன், ஏறத்தாழ
நூறு கோடிப் பேர் போதுமான உணவு இன்றி இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
பசியால்
வாடும் ஏழைகளுக்காக எல்லாக் குடும்பங்களுமே சில தியாகங்களைச் செய்யுமாறு கேட்டுக் கொண்ட
ஷீரன், ஒவ்வோர் ஆறு வினாடிகளுக்கும் ஒரு குழந்தை வீதம் இறக்கின்றது என்பதைக் குறிப்பிட்டார்.