வருகிற மார்ச் மாதம் 17-23 வரை திருத்தந்தை ஆப்ரிக்காவில் திருப்பயணம் மேற்கொள்கிறார்
27ஜனவரி2009. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வருகிற மார்ச் மாதத்தில் மேற்கொள்ளவுள்ள ஆப்ரிக்காவுக்கான
ஏழு நாட்கள் திருப்பயணத்தில், அக்கண்டத்திற்கான சிறப்பு ஆயர் மன்றம் குறித்த தயாரிப்புக்கள்,
முஸ்லீம்களுடனான உறவுகள், பெண்களின் முன்னேற்றம் போன்றவை முக்கிய இடம் பெறும் என்று திருப்பீடம்
அறிவித்தது.
வருகிற மார்ச் மாதம் 17 முதல் 23 வரை, காமரூன் அங்கோலா ஆகிய ஆப்ரிக்க
நாடுகளுக்குத் திருத்தந்தை மேற்கொள்ளவுள்ள அப்போஸ்தலிக்கத் திருப்பயணத் திட்டங்கள் பற்றி
நிருபர் கூட்டத்தில் வெளியிட்ட திருப்பீட பத்திரிகை அலுவலகம், இப்பயணம் அவர் இத்தாலிக்கு
வெளியே மேற்கொள்ளும் 11வது வெளிநாட்டுப் பயணமாக இருக்கும் என்று கூறியது.
மார்ச்
17 செவ்வாய்க்கிழமை மாலை காமரூன் தலைநகர் யவுண்டே செல்லும் திருத்தந்தை, 18ம் தேதி அரசுத்
தலைவர் பவுல் பியாவையும், 19ம் தேதி முஸ்லீம் தலைவர்களையும் சந்திப்பார். இன்னும் அந்நாட்டில்
மேலும் பல நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் 20ம் தேதி அங்கோலா செல்வார். அந்நாட்டில்
பயணத் திட்டங்களை நிகழ்த்தி, 23ம் தேதி உரோம் புறப்படுவார்.