2009-01-27 16:48:21

உரோமையில் தண்ணீர் கூட்டம்


27ஜன.2009 உலக வெப்பநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள சுத்தத் தண்ணீர் வளங்களைக் காப்பாற்றுவது குறித்து ஆராய்வதற்கென நாளை உரோமையில் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் ஒன்றைத் தொடங்குகின்றனர்.

வருகிற மார்ச் 16 முதல் 22 வரை துருக்கியின் இஸ்டானபுல்லில் நடைபெறவிருக்கின்ற 5வது உலகத் தண்ணீர் மாநாட்டிற்குத் தயாரிப்பாக இந்த உரோமைக் கூட்டம் நடைபெறுகிறது.

ஏறத்தாழ 90 விழுக்காட்டு சுத்த நீரை வேளாண்மை எடுத்து விடுகின்றது என்றும் ஒருநாளைக்கு ஒருவருக்குத் தேவையான உணவுப் பொருளை உற்பத்தி செய்வதற்கு 2000 முதல் 5000 லிட்டர் வரையிலான தண்ணீர் தேவைப்படுகின்றது என்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவன உதவி இயக்குனர் அலெக்ஸாண்டர் முல்லர் கூறினார்.

இன்று ஏறத்தாழ 650 கோடியாக இருக்கும் உலக மக்கள் தொகை 2050ல் 900 கோடிக்கும் அதிகமாகும். இது உலக வேளாண்மைக்குப் பெரும் சவாலை முன்வைக்கின்றது என்றும் முல்லர் கூறினார்.

 








All the contents on this site are copyrighted ©.