உரோமை நகரம் மேகமூட்டமாகவும் குற்றாலம் போன்ற சாரல் மழையோடும் இருந்தது . இன்றைய மறைபோதகம்
முந்நாள் திருத்தந்தை 6 ஆம் பவுல் அரங்கத்தில் இருந்தது .
மறைபோதகத்துக்கு முன்னர்
திருத்தந்தை புதனன்று தூய ஆக்னேசம்மாளின் விழாவைமுன்னிட்டு இங்குள்ள வழக்கப்படி பசிலிக்காவுக்குக்
காணிக்கையாக வந்த அர்ச்சிக்கப்பட்ட செம்மறியாடுகளை பெற்றுக்கொண்டார் . ஆக்னஸ் என்றால்
செம்மறி என்று பொருள் . மேலும் ஆஸ்திரியா நாட்டின் மரியாசெல் மாநகரம் திருத்தந்தைக்கு
அந்நகரின் கெளரவக் குடிமகன் என்ற பட்டம் வழங்கி மகிழ்ச்சியைத் தெரிவித்தது . மரியாசெல்
நகரத்தில் அன்னை மரியாவுக்குப் புகழ்பெற்ற திருத்தலம் உள்ளது .
திருத்தந்தை வந்திருந்தவர்களை
வாழ்த்தி வரவேற்றார் . கடந்த ஞாயிறு நாம் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தைத் தொடங்கினோம்
என்றார் திருத்தந்தை . இறைவாக்கினர் எசக்கியேல் அதிகாரம் 37 , 17 இல், யூதாவையும் இஸ்ராயேலையும்
இரண்டு கோல்களாக உருவகப்படுத்தி அவ்விரண்டையும் ஒன்றாக இணைத்து அவை ஒரே நாடாக ஐக்கியமாகுமாறு
கடவுள் ஆணையிட்டு பிரிந்திருந்த நாடுகளை கடவுள் ஒன்று சேர்த்ததாகக் கூறுகிறார் . கிறிஸ்தவர்கள்
என்ற முறையில் நாம் இவ்வார்த்தைகளைப் படித்து கிறிஸ்துவின் சீடர்கள் நாமெல்லாம் ஒன்றாகச்
செபிக்கவும் பணிமேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறோம் என்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்
. 2 ஆம் வத்திக்கான் சங்கம் கூறுவதுபோல மனமாற்றம் இல்லாது கிறிஸ்தவ ஐக்கியம் கிடையாது
. கிறிஸ்தவர்களை ஒன்று சேர்ப்பதற்காக ஆண்டவர் தரும் அனைத்து நனமைகளுக்கும் நாமெல்லாம்
நன்றி கூற இந்தக் கிறிஸ்தவ ஐக்கிய வாரம் நமக்குத் தரப்பட்டுள்ளது .
வத்திக்கானிலும்
அவரது திருப்பயணத்தின் போதும் பல்வேறு திருச்சபையின் பிரதிநிதிகள் , கிறிஸ்தவக் குழுக்களின்
பிரதிநிதிகளைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றதை திருத்தந்தை அதனை நன்றியோடு நினைவு
கூர்ந்தார். இந்த வாரம் தலத்திருச்சபையிலும் , உலகு எங்கும் கிறிஸ்தவ ஒருமைப்பாட்டிற்காக
எடுக்கப்படும் முயற்சிகளின்போது கடவுள் வார்த்தைக்குச் செவிமடுத்து ஒரே ஆண்டவர் , ஒரே
விசுவாசம் , ஒரே திருமுழுக்கை நாம் ஏற்றுக் கொள்ளும் வரம் கேட்போம் . இறைவாக்கைக் கவனமாகச்
செவிமடுத்து , செபத்தை ஆழப்படுத்தி , கலந்து பேசுவதை அதிகப்படுத்தி திருத்தூதர் பவுலைப்
போல நாமும் ஆண்டவர்மீது முழுமையாகப் பற்றுக்கொண்டு அவருடைய உடலாகிய திருச்சபையின் ஒருமைப்பாட்டிற்காக
வாழ அத்திருத்தூதரைப் பின்பற்றுவோம் என மறைபோதகம் வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்
.
முடிவில் வந்திருந்த அனைவருக்கும் , சிறப்பாக மால்ட்டா நாட்டிலிருந்து வந்திருந்த
பேராயர் பால் கிரமோனாவையும், அவரோடு வந்த திருப்பயணியரையும் வாழ்த்தி தமது அப்போஸ்தலிக்க
ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .