2009-01-14 15:34:57

சிக்கலான பிரச்சனைகளுக்கு வன்முறை எளிதான தீர்வாகத் தெரியலாம், ஆனால் அதுவல்ல தீர்வு - எருசலேம் இலத்தீன் ரீதி பிதாப்பிதா


ஜன.14,2009. சிக்கலான பிரச்சனைகளுக்கு வன்முறை எளிதான தீர்வாகத் தெரியலாம், ஆனால் அதுவல்ல தீர்வு என்று எருசலேம் இலத்தீன் ரீதி பிதாப்பிதா பேராயர் ப்புவாட் த்வால் கூறினார்.

புனித பூமி கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு பெத்லகேமுக்கு நடத்திய பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்களுக்கு உரையாற்றிய பிதாப்பிதா த்வால், சமய மற்றும் அரசியல் தலைவர்கள் பரிவும் ஞானமும் இரக்கமும் கொண்டவர்களாக வாழ அவர்களுக்காகச் செபிக்குமாறு கூறினார்.

இந்த யாத்திரையில் புனித பூமித் திருச்சபைக்கு ஆதரவு வழங்கும் ஆயர் பேரவைகளின் தலைவர்களும் இன்னும் பிற ஆயர்களும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரிட்டனின் லிவர்பூல் பேராயர் பாட்ரிக் கெல்லி, சமயத் தலைவர்கள் தலத்திருச்சபையோடு தோழமையுணர்வு கொள்வதற்காக மட்டுமன்றி இப் புனித பூமியின் வருங்காலச் சிறார் நல்ல பாதுகாப்பான எதிர்காலத்தைக் கொண்டிருப்பதற்குச் செபிப்பதற்கும் அங்கு வந்ததாகக் கூறினார்.

காசாவில் இடம் பெறும் சண்டையில் இதுவரை 300 சிறார் உட்பட ஏறத்தாழ ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.