2004ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாக
ஐ.நா. மனிதாபிமானக் குழுக்கள் கூறுகின்றன
டிசம்.26.2008. இந்தியப் பெருங்கடலில் சுனாமி ஆழிப்பேரலை இயற்கைப் பேரிடர் ஏற்பட்டு நான்கு
ஆண்டுகள் ஆகியுள்ள வேளை, அதனால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
காணப்படுவதாக ஐ.நா. மனிதாபிமானக் குழுக்கள் கூறின.
ஐ.நா.வின் கணிப்புப்படி, 2004ஆம்
ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமியில் இரண்டு இலட்சத்து முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட
உயிர்கள் பலியாகின, இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும் வேலைகளையும் இழந்தனர்.
புதிய
பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன, படைப்பிரிவினரும் தன்னார்வப் பணியாளரும் வீடுகளையும் நகரங்களையும்
கட்டியெழுப்பி மக்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல உதவியுள்ளனர் என்றும் மனிதாபிமானக் குழுக்கள்
தெரிவித்தன.
மேலும் இந்த சுனாமியில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட தன் மக்களை
பலி கொடுத்தும் ஐம்பதாயிரத்துக்கு அதிகமானோர் வீடுகளை இழந்தும் இருந்த இலங்கையில் அதன்
நினைவாக இன்று காலை நாடு முழுவதும் 2 நிமிடம் மௌனம் அனுசரிக்கப்பட்டது.