2008-12-22 16:47:04

புனித பவுல் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி - புனித பவுலின் அன்பு வாழ்க்கை


டிச.22,2008. மனிதர்கள் பலவிதம். அவர்களின் பார்வைகளும் பலவிதம். புனித பவுல் என்ற மாமனிதர் பற்றியும் பலரும் பல கோணங்களில் பார்க்கின்றனர். ஒருசிலருக்கு அவர் நல்லாசிரியராக, நற்செய்தி போதகராக, திருத்தூதராகத் தெரிகிறார். வேறுசிலருக்கு அவர் இறைவாக்கினராக, தியான யோகியாகத் தென்படுகிறார். இன்னும் சிலருக்கு அவர் திருஅவைகளைச் சீர்படுத்திச் செயலாற்றுகிறவராகக் காணப்படுகிறார். “நன்மையைப் பார். செய்பவரை நோக்காதே” என்பார்கள். ஆனால் புனித பவுலின் விடயத்தில் அவரது தமஸ்கு அனுபவத்திற்குப் பின் அவரை அறிகிறவர்கள், இன்னும் இவரது திருமுகங்களைக் கருத்தூன்றி வாசிப்பவர்கள் எனப் பலரும் அவரது பெயரை ஏத்திப் போற்றிப் புகழ்கின்றனர். இவரது பெயரால் எத்தனையோ துறவு சபைகள், ஆலயங்கள், நிறுவனங்கள் இருப்பது இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன. அதுவும் இந்தப் பவுல் ஆண்டில், ஆலயங்களில் புனித பவுலின் திருமுகப் பகுதிகளை மையப்படுத்தி மறையுரைகள் ஆற்றப்படுகின்றன. பல கல்வி நிறுவனங்களில் பவுல் பற்றிய படங்கள் மாட்டப்பட்டு அவரது புகழ் பரப்பப்படுகின்றது. பவுலின் திருமுகங்களை வைத்துப் பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், குறு நாடகங்கள் நடத்தப்படுகின்றன. புனித பவுலின் பெருமை அறியாதோர் இந்தப் பவுல் யூபிலி ஆண்டில் மேலும் அறிய ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு வத்திக்கான் வானொலி நேயர்களாகிய நீங்களே சான்று. எனவே இம்மகான் பற்றிய பலமுகக் கண்ணோட்டத்தில் இன்று அவரைப் பற்றி புனித சியன்னா கத்ரீன் சொன்ன, “அந்த அன்புப் பவுல் ” பற்றி, அதாவது அவரது அன்பு வாழ்க்கைப் பற்றி பார்ப்போம்.

புனித பவுலின் அன்பு, தாயன்பு தந்தையன்பு போன்றது என்று விவிலிய அறிஞர்கள் சொல்கிறார்கள். சீராக் புத்தகம் பிரிவு 30, சொற்றொடர் ஒன்று, “தம் மகனிடம் அன்பு கொண்டிருக்கும் தந்தை அவனை இடைவிடாது கண்டிப்பார்” என்று சொல்கிறது. பொதுவாக அன்பு இருக்கும் இடத்தில்தான் கோபமும் இருக்கும் என்று சொல்வார்கள். இதைப் பவுலிடம் மிகத் தெளிவாகவே காணமுடிகின்றது. எடுத்துக்காட்டாக அவர், கலாத்திய திருஅவையினரை, “அறிவிலிகளான காலத்தியரே” என்று கடிந்து கொண்டது அவர்களை அதிகம் அன்பு செய்ததால்தான் என்று சொல்லலாம். ஏனெனில் இதே கலாத்தியருக்கு எழுதிய மடல், 4, 19இல் அவர், என் பிள்ளைகளே, உங்களில் கிறிஸ்து உருவாகும்வரை உங்களுக்காக மீண்டும் பேறுகால வேதனையுறுகிறேன் என்கிறார். மேலும், பவுல் கொரிந்திய திருஅவை கிறிஸ்தவர்க்கு எழுதிய போது, நீங்கள் ஊனியல்பு கொண்டவர்கள் எனவும், கிறிஸ்துவோடுள்ள உறவில் குழந்தைகள் எனவும் எண்ணிப் பேசுகிறேன். நான் உங்களுக்குத் திட உணவை அல்ல, பாலையே ஊட்டினேன். ஏனெனில், திட உணவை உங்களால் உண்ண முடியவில்லை என்று கூறியிருக்கிறார். இதே தாயன்போடு தெசலோனிக்கருக்கும் எழுதியிருக்கிறார். எப்படியெனில்,

நாங்கள் உங்களிடையே இருந்தபொழுது, தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதுபோல், கனிவுடன் நடந்து கொண்டோம். எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்: ஏனெனில் நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள். 1தெச.2,6-9

எனவே புனித பவுல் தாம் உருவாக்கிய திருஅவை கிறிஸ்தவர்க்கு மடல்கள் எழுதிய போது அவரிடம் கண்டிப்பும் கனிவும் இருந்ததைக் காண முடிகின்றது. இன்னும், தாயன்பிலே கண்ணீருக்கு அதிக இடம் உண்டு என்பது நம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். பவுலும் கிறிஸ்துவில் தாம் பெற்றெடுத்த மக்களுக்காகக் கண்ணீர் விட்டிருக்கிறார். அவர் எபேசு மூப்பர்களிடமிருந்து விடை பெறும் போது,

விழிப்பாயிருங்கள். மூன்று ஆண்டு காலமாக அல்லும் பகலும் இடைவிடாது கண்ணீரோடு நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தி வந்ததை நீங்கள் நினைவிற் கொள்ளுங்கள்

என்கிறார். பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது மடலில், நான் மிகுந்த வேதனையோடும் மனக்கவலையோடும் கலங்கிய கண்களோடும் அதை உங்களுக்கு எழுதினேன். உங்களுக்கு மனவருத்தம் தரவேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக நான் உங்கள் மேல் கொண்டுள்ள மிகுந்த அன்பை நீங்கள் உணரவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு எழுதினேன் என்று குறிப்பிடுகிறார்.

பவுல், பிலிப்பி திருஅவையில் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவராய் நடந்து வந்த பலரைப் பற்றி எழுதிய போது,

கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன்

என்பார். எனவே தமிழ் சைவ மரபுப்படி புனித பவுல் பற்றி நாம் சொல்ல வேண்டுமானால் அவர் தாயும் ஆனவராக இருக்கின்றார். பவுல், தாயுமானவர் மட்டுமல்ல, அவர் தந்தையுமானவர். அதற்கும் அவரின் எழுத்துக்களே சான்று. கொரிந்து கிறிஸ்தவர்க்கு எழுதுகிறார்-

நீங்கள் என் அன்பார்ந்த பிள்ளைகளென எண்ணி, உங்களுக்கு அறிவு புகட்டவே இவற்றை எழுதுகிறேன். கிறிஸ்துவைச் சார்ந்த உங்களுக்கு ஆசிரியர்கள் பல்லாயிரம் இருக்கலாம்: ஆனால் தந்தையர் பலர் இல்லை. நற்செய்தி வழியாக நான் உங்களைக் கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தேன்.

அதே கொரிந்து கிறிஸ்தவர்க்கு எழுதிய இரண்டாம் மடலில்,

உங்களுடைய உடைமைகளை அல்ல, உங்களையே நாடி வருகிறேன். பெற்றோருக்குப் பிள்ளைகள் செல்வம் சேமித்து வைக்க வேண்டியதில்லை. மாறாக, பெற்றோரே பிள்ளைகளுக்காகச் சேமிக்க வேண்டும். நான் உங்களுக்காக எனக்குள்ளவற்றையும், ஏன் என்னையுமே மனமுவந்து அளித்திடுவேன். உங்கள் மீது நான் இத்துணை அன்பு கொண்டிருக்க நீங்கள் என்மீது கொண்டுள்ள அன்பு குறையலாமா?

என்று கேள்வி கேட்கிறார். இன்னும் தெசலோனிக்கருக்குக் கூறுவார் – ஒரு தந்தை தம் பிள்ளைகளை நடத்துவதுபோல உங்களை நடத்தினோம் என்று. இவ்வாறு தந்தைக்குரிய கடமையைத் தாம் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். கொலோசையருக்கு எழுதிய மடலில், பிள்ளைகளுக்காகத் தந்தை துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன் என்கிறார். இன்னும், தவறு செய்யும் போது தண்டிப்பது தந்தையின் கடமை என்பதும் இவரது மடல்களில் தெரிகின்றது. எனவே புனித பவுல் அம்மை அப்பனாக, தாயன்பும் தந்தையன்பும் மிக்கவராகத் தாம் உருவாக்கிய கிறிஸ்தவ சபை மக்களிடம் நடந்து கொள்கிறார்.

புனித பவுலின் அன்பு இயேசுவின் அன்பு போன்றது. கிறிஸ்து இயேசுவிடம் விளங்கிய இரக்கம், பரிவு, கனிவு, ஈவு, கருணை ஆகிய பண்புகளைப் பவுலும் தம் வாழ்க்கையில் பிரதிபலிக்கிறார். கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு உங்கள் மீது ஏக்கமாயிருக்கிறேன் என்று பிலிப்பியருக்கு எழுதியிருக்கிறார். கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள் என்று எபேசியரிடம் அறிவுறுத்தியிருக்கிறார்.

மேலும், கிறிஸ்து இயேசுவின் அளவு கடந்த அன்பைத் தாம் அனுபவித்தது போல, நீங்களும் அவரின் அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக, எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். இவையனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள், கிறிஸ்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள் என்கிறார்.

இவ்வாறு பவுல் தாம் மக்கள் மீது கொண்டிருந்த அன்பை, தாயன்பாக, தந்தையன்பாக எடுத்துரைத்து, அவ்வன்பு இயேசுவின் அன்பே என்றும் கூறி மகிழ்ந்தார். அன்பு பற்றி பவுல் கொரிந்து கிறிஸ்தவர்க்கு எழுதிய முதல் மடல், 13ம் பிரிவை வாசித்தால் அதில் பவுல் கூறுவது தன்னைப் பற்றியே என்று அறியலாம்.

நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை. அன்பு ஒருபோதும் அழியாது. நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

அன்பர்களே, பவுல் பிலிப்பியருக்கு எழுதியுள்ளது போல, கடவுள் வடிவில் விளங்கிய இயேசு, தம்மையே வெறுமையாக்கி மனித உருவில் தோன்றினார். இந்த மாபெரும் பேருண்மையான வெகு விரைவில் கிறிஸ்துமஸைக் கொண்டாடவிருக்கின்றோம். இதை அர்த்தமுள்ள விதத்தில் சிறப்பிக்க நமது வாழ்க்கையும் தாயன்பு, தந்தையன்பு நிறைந்ததாக, அனைத்திற்கும் மேலாக இயேசுவின் பண்புகள் கொண்டதாக விளங்க வேண்டும்.

உலகப் புகழ் பெற்ற சிற்பி ஒருவர் கருங்கல் ஒன்றில் அழகான குழந்தை இயேசுவை வடித்தெடுத்தார். அதனைப் பார்த்து வியந்த பலர், இத்தனை அழகான சிலையை எப்படி உங்களால் உருவாக்க முடிந்தது என்று கேட்டார்கள். அதற்கு அவர், இந்த அழகான குழந்தை இயேசுவை உருவாக்கியது னானல்ல. அது அந்தக் கருங்கல்லுக்குள் ஏற்கனவே இருந்தது. எண் கண்கள் அதைக் கண்டு கொண்டன. அதன் தேவையில்லாத பகுதிகளை அகற்றினேன். சிலை தானாக உருவாகிவிட்டது. அன்பனே, நீயும் நல்ல அன்பான வாழ்க்கை வாழ வேண்டுமா. அப்படியானால் உன்னில் வேண்டாத பகுதிகளை நீக்கிவிடு. உன்னையே செதுக்கிக் கொள். அசத்தலான சிற்பி நீயே.








All the contents on this site are copyrighted ©.