2008-12-17 15:43:54

ஐ.நா.பொதுச் செயலரின் செய்தி : தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான ஐக்கிய நாடுகள் தினம் டிசம்பர்19


டிச.17,2008. நிதி, உணவுப் பொருட்கள், வெப்பநிலை மாற்றம் ஆகியவற்றில் உலக அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், வளரும் நாடுகள் மத்தியில் இன்னும் அதிக ஒத்துழைப்புக்கு அழைப்புவிடுக்கின்றன என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.

தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான ஐக்கிய நாடுகள் தினம் டிசம்பர்19, இவ்வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்படவிருப்பதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட பான் கி மூன், தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு வெப்பநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் கூறினார்.

தெற்கு-தெற்கு வியாபாரம், முதலீடு போன்றவை உயர்ந்துள்ளன. இன்னும் தெற்கு-தெற்கு வளர்ச்சிக்கான உதவிநிதி 2006ம் ஆண்டில் 1200 கோடி டாலரை எட்டியுள்ளது என்றும் மூனின் செய்தி கூறுகிறது.

தொழிற் வளர்ச்சி அடைந்த நாடுகளைவிட பல வளரும் நாடுகளின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதையும் சுட்டிக்காட்டிய அவர், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க முயற்சித்து வரும் வளரும் நாடுகளைப் பிற நாடுகளும் பின்பற்றுமாறும் கேட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.