பணக்கார நாடுகள் கஞ்சத்தனமாக மாறிவருவதாக அச்சத்தை வெளிய்ட்டுள்ளது திருப்பீடம்
நவ.25,2008. தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் குறித்த பணக்கார நாடுகளின் கவலை, வளரும்
நாடுகளுக்கான உதவியில் கஞ்சத்தனமாக செயல்பட வைப்பது போல் தெரிவதாக திருப்பீடம் தனது அச்சத்தை
வெளியிட்டுள்ளது
வருகிற சனிக்கிழமை தோஹாவில் தொடங்கும் வளர்ச்சிக்கான நிதியுதவி
பற்றிய சர்வதேச கூட்டத்திற்குத் தயாரிப்பாக திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை தயாரித்துள்ள
ஏட்டில், ஏற்கனவே உலக நாடுகள் எதிர்நோக்கிய உணவு மற்றும் எரிசக்தி பிரச்சனைகளுடன் தற்போது
ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் வளர்ச்சிக்கான நிதியுதவியை இரண்டாவது இடத்தில் வைப்பதற்குக்
காரணமாக அமையக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
உலகளாவிய நிதி குறித்த நடவடிக்கைகளைத்
திறம்பட கண்காணிக்கவும் பொருளாதாரக் கொள்கைகளில் ஏழை நாடுகளுக்கு மிகுந்த கவனம் செலுத்தவும்
ஒரு புதிய சர்வதேச ஒப்பந்தத்திற்குத் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் அழைப்புவிடுக்கின்றன
என்றும் அவ்வேடு கூறுகிறது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வுகள் தொடர்ந்து
ஏழை நாடுகளை வருத்தக்கூடாது, அதேசமயம் பணக்கார நாடுகளுக்குச் சாதகமாகவும் அமையக் கூடாது
என்றும் அத்திருப்பீட ஏடு பரிந்துரைத்துள்ளது.