மொசூல் கிறிஸ்தவர்க்குப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல் – கல்தேயரீதி ஆயர்
அக்.28, 2008. அச்சுறுத்தல், பகற்கொள்ளை, இசுலாமிய பிரச்சாரம் ஆகியவற்றினால் வட ஈராக்கிலுள்ள
மொசூலிலிருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவரும், குர்த் இஸ்லாமியரும் அந்நகரை விட்டு வெளியேறியுள்ளனர்
என்று அப்பகுதி கல்தேயரீதி ஆயர் ராபன் அல் காசாஸ் கூறினார்.
திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் ஈராக் கிறிஸ்தவர் சார்பாகக் குரல் கொடுத்ததையொட்டி ஆசிய செய்தி நிறுவனத்துக்குப்
பேட்டியளித்த அர்பில் ஆயர் ராபன், சில வாரங்களுக்குள் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர், பத்தாயிரத்துக்கும்
மேலான கிறிஸ்தவர்கள் வெளியேறியுள்ளனர் என்று கூறினார்.
பள்ளிகளில் செய்யப்படும்
இசுலாமிய பிரச்சாரம், சுவர்களில் எழுதப்பட்டுள்ள இசுலாமிய ஸ்லோகங்கள், இன்னும் அச்சுறுத்தல்,
பொருளாதாரத் தடைகள், பகற்கொள்ளை ஆகியவையினால் மிதவாத முஸ்லீம்களும் கிறிஸ்தவர் சார்பாகப்
பேசுவதற்கும் தங்கள் வீடுகளில் புகலிடம் அளிப்பதற்கும் பயப்படுகின்றனர் என்றும் ஆயர்
தெரிவித்தார்.
ஈராக்கில், குறிப்பாக மொசூலில் இடம் பெற்று வரும் கிறிஸ்தவர்க்கெதிரான
வன்முறையை தடுப்பதற்கு, மனிதனை மதிக்கும் நன்மனம் கொண்ட மற்றும் அனைத்து மதத்தவரும் குரல்
கொடுக்குமாறு கேட்டுள்ளார் ஆயர் ராபன் அல் காசாஸ்.
மொசூலிலிருந்து சிரியா செல்லும்
நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்க்கு ஐ.நா.வின் அகதிகள் அமைப்பு உதவி வருகிறது.