2008-10-06 14:56:37

அக்டோபர் 06 – தவமுனிவர் புரூனோ


அக்டோபர் 06 – இன்று தவமுனிவர் புரூனோ திருவிழா. இவர் 1030இல் ஜெர்மனியின் கொலோன் நகரில் பிறந்தார். 25வது வயதில் குருவான இவர், உரோமையிலும் பிற இடங்களிலும் குருக்களிடையே பெருகிக் கிடந்த அட்டூழியங்களையும் அவலங்களையும் களைந்தெறிவதில் திருத்தந்தை 7ஆம் கிரகரிக்கு வலக்கை போல் இருந்து உழைத்தார். 20 ஆண்டுகள் பள்ளிகளை நிர்வகித்து வந்தார். இருப்பினும் இவரது கவனமெல்லாம் தனிமையை நாடி செபதபத்தில் நாட்களைச் செலவிடுவதில் இருந்தது. இவரது திட்டத்தை மனமுவந்து ஏற்றுக்கொண்ட 6 இளைஞருடன் சேர்ந்து ஷார்ட்ரூட்ஸ் மலைப்பகுதியில் மெளன செபதப முயற்சிகளைத் தொடங்கினார். கடும் ஏழ்மையிலும் மெளனத்திலும் கடும் தபத்திலும் இவர்கள் வாழ்ந்தனர். இதுவே கர்த்தூசியன் துறவு சபை ஆரம்பமாகக் காரணமாயிருந்தது. லூத்தர் கிளர்ச்சி செய்து பிரிந்து போன காலத்தில் மேலை நாடுகளில் 195 கர்த்தூசியன் மடங்களிருந்தன. இன்று ஏறத்தாழ 500 மெளன துறவிகளும் இதேபோல் மூன்று மடங்கு பெண் துறவிகளும் இச்சபையில் இருக்கின்றனர்.

சிந்தனைக்கு – திறமையான தலைவன் எதிரிகளிடம் பாடம் படிக்கின்றான்








All the contents on this site are copyrighted ©.