செப்.15, 2008 வியாகுல அன்னையின் விழாவான இன்று, பாவிகளுக்காகத் தமது மகன் அனுபவித்த
பாடுகளைப் பகிர்ந்து கொண்ட மரியா பற்றி தியானிக்கிறோம். கிறிஸ்தவர்கள் மரியாவின் புன்முறுவலை
எப்பொழுதும் தேடுகிறார்கள். இத்தேடல் பக்தியினிமித்தம் எழுவது அல்ல, மாறாக கிறிஸ்து நமக்குத்
தாயாகக் கொடுத்த மரியாவுடனான ஆழமான மனித உறவை ஏற்படுத்திக் கொள்வதன் வெளிப்பாடாகும்.
இந்த லூர்து நகரில் இடம் பெற்ற தொடர் காட்சிகளில், 1858 ஆம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பெர்னதெத்
மரியின் புன்முறுவலை மிகச் சிறப்பான விதத்தில் தியானித்தாள். தனக்குக் காட்சி கொடுக்கும்
அந்த அழகான பெண் யார் என்று அறிவதற்கு இளம் சிறுமி
பெர்னதெத் விரும்பிய போது,
அவளுக்கு முதலில் கிடைத்த பதில் புன்முறுவலே. மரியின் இந்தப் புன்முறுவலில் கடவுளின்
பிள்ளைகள் என்ற முறையில் நமது மாண்பு பிரதிபலிக்கின்றது. இந்த மாண்பு நோயாளிகளுக்கு ஒருபொழுதும்
புறக்கணிக்கப்படக் கூடாது. நீடித்த துன்பங்கள் ஒருவரது வாழ்வை நிலைதடுமாறச் செய்கிறன்றன.
சிலவேளைகளில் வாழ்வின் பொருளையும் மதிப்பையும்கூட கேள்விக்கு உள்ளாக்குகின்றன. இறையருளன்
உதவி இன்றி நாம் போராட்டங்களில் நிலைநிற்க முடியாது. பேச்சுகளுக்குச் சரியான வார்த்தைகள்
இல்லாத போது, இறைவனின் அன்புப் பிரசன்னத்தை நோக்க வேண்டிய தேவை எழுகிறது. நாம் எதிர்த்துப்
போராடும் தீமைகளையும் துன்பங்களையும் கிறிஸ்து மற்றும் அன்னைமரியா தவிர வேறு யார் நன்கு
புரிந்து கொள்ள முடியும். துன்புறுவோர், போராடுவோர் அனைவரும் மரியிடம் திரும்புமாறு தாழ்மையுடன்
கேட்கிறேன் என்றார் திருத்தந்தை.
மரியின் புன்முறுவலானது
உயிருள்ள நீர் ஊற்று. லூர்தில் பெர்னதெத்துக்கு மரியா சுட்டிக் காட்டிய ஊற்றானது ஆன்மீகத்
தன்மையின் எளிமையான அடையாளம். ஒவ்வொரு தாயைப் போலவே, ஏன் மற்றெந்த தாய்மாரையும்விட மரியின்
அன்பின் ஆசிரியர். இதனால்தான் பல நோயாளிகள் லூர்துக்கு வருகிறார்கள். கிறிஸ்து திருவருட்சாதனங்கள்
மூலம், குறிப்பாக நோயில்பூசுதல் திருவருட்சாதனம் மூலம் நோயாளிகளுக்கும் ஊனமுற்றோருக்கும்
தமது மீட்பை வழங்குகிறார். இத்திருவருட்சாதன அருள் கிறிஸ்துவை குணமளிப்பவராக நமது வாழ்வில்
ஏற்பதைக் கொண்டுள்ளது. இருந்த போதிலும் கிறிஸ்து இவ்வுலகின் கண்ணோட்டத்தின்படியான குணமளிப்பவர்
அல்ல. ஆனால், நோயாளி தனது துன்பத்தைத் தாங்கி அவரோடு வாழ்வதற்கு வரம் அளிக்கிறார். கிறிஸ்துவின்
பிரசன்னம், வேதனை ஏற்படுத்தும் தனிமையைப் போக்குகிறது என்ற திருத்தந்தை, மருத்துவமனைகள்
இன்னும் பல்வேறு நிறுவனங்களில் நோயாளிகள் மத்தியில் பணியாற்றும் அனைவருக்கும் தனது நன்றியைத்
தெரிவித்தார். அதோடு நோயாளிகள் இருக்கும் இடங்களில் அவர்களைச் சந்திக்குமாறும் கேட்டுக்
கொண்டார். இப்பிறரன்புச் செயலானது மரியாவுக்கே செய்வதாகும். மரியா உங்களை நோக்கித் தமது
புன்முறுவலை காட்டுகிறார் என்று சொல்லி லூர்து மாதாவே உடலிலும் உள்ளத்திலும் வேதனைப்படுவோருக்காகச்
செபிக்கின்றோம் என்று சொல்லி இம்மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.